உள்ளூர் செய்திகள்
கொடுமுடி காவிரி ஆற்றில் நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடித்த வாலிபர் கை துண்டானது
கொடுமுடி காவிரி ஆற்றில் மீன் பிடித்த வாலிபர் கை துண்டானது சம்பவம் குறித்து நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் பனங்காட்டுபுதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (27), இவரது நண்பர் சதீஸ் (25). நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இவர்கள் 2 பேரும் மீன் பிடிக்க முடிவு செய்தனர்.
இதற்காக பாசூர் சங்கிலிகருப்பண சாமி கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றனர். அப்போது அவர்கள் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டை தண்ணீரில் வீசி மீனை பிடித்தனர்.
ஒருகட்டத்தில் தண்ணீரில் வீசுவதற்கு முன்பே ராஜேந்திரன் கையில் இருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் அவரது வலது கை மணிகட்டோடு துண்டானது. அருகில் இருந்த அவரது நண்பர் சதீஸ்குமாருக்கும் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டது
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ராஜேந்திரன், சதீஸ் ஆகியோருக்கு நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது என்றும் அவர்களுக்கு வெடிகுண்டுகளை சப்ளை செய்தது யார் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.