உள்ளூர் செய்திகள்
600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
பவானியில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து கோபி சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:
பவானியில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து கோபி சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டத்திலிருந்து சமீபகாலமாக கர்நாடக மாநிலத்திற்கும், ஈரோடு மாவட்டத்தில் தங்கி உள்ள வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காகவும் ரேஷன் அரிசியை கடத்தி செல்லும் கும்பலை ஈரோடு குடிமை பொருள் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி கைது செய்தும், வாகனங்கள் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
அதன்படி நேற்று இரவு குடிமைப்பொருள் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீசார் பவானி கூடுதுறை அருகே வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஆம்னி வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
வேனில் இருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சேர்ந்த விமல்குமார் (வயது 22) என்பதும், பெருந்துறையில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு ரேஷன் அரிசியை விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து விமல்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 600 கிலோ ரேஷன் அரிசி, வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் விமல்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.