உள்ளூர் செய்திகள்
தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு

பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டை - தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு

Published On 2022-01-30 07:49 GMT   |   Update On 2022-01-30 07:49 GMT
திருவண்ணாமலை அருகே பள்ளியில் சண்டையிட்டது தொடர்பாக தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இப்பள்ளியின் தலைமையாசிரியராக அண்ணாமலை (வயது58) என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் ஆசிரியர் செழியன் (50) (மாற்றுத்திறனாளி) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இவர் 9,10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாட ஆசிரியராக உள்ளார்.

கடந்த 26-ந்தேதி குடியரசு தினத்தன்று கொடியேற்று விழாவுக்கு காலதாமதமாக வந்த 5 ஆசிரியர்களை பள்ளி தலைமையாசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதில் ஆசிரியர் செழியனும் ஒருவர்.

இதுதொடர்பாக கடந்த 27-ந்தேதி பள்ளியில் தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர் செழியனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அவர்கள் ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்து தாக்கிக் கொண்டனர்.

இந்த சம்பவத்தைச் ஆசிரியர்கள் சிலர் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ கலசப்பாக்கம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

இந்த மோதல் குறித்து தகவலறிந்த போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணை தொடர்பான அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வத்திடம் வழங்கினார்.

இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் அருள் செல்வம், பள்ளியில் சட்டையை பிடித்து மோதலில் ஈடுபட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட தலைமையாசிரியர் அண்ணாமலை, மாற்றுத்திறனாளி ஆசிரியர் செழியன் மற்றும் இச்சம்பவத்தில் தொடர்புடைய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News