உள்ளூர் செய்திகள்
மாநகராட்சி அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

ஈரோடு மாவட்டத்தில் 52 இடங்களில் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது

Published On 2022-01-28 14:54 IST   |   Update On 2022-01-28 14:54:00 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி ஈரோடு மாவட்டத்தில் 52 இடங்களில் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.
ஈரோடு,:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 52 இடங்களில் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, 4  நகராட்சி, 42  பேரூராட்சிகளில்  வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.  ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளில் போட்டியிட  வேட்புமனு தாக்கல் செய்ய  4 மண்டல அலுவலகங்கள்,  மாநகராட்சி அலுவலகம் மைய கட்டிடம்,  வீரப்பன் சத்திரம் பழைய  அலுவலகம் என 6  இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

மேலும் 4  நகராட்சிகளில் போட்டியிட வேட்பு மனுவை  அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இதேபோல் 42 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிட வேட்பு மனுவை அந் தந்த பேரூராட்சி அலுவலகங்களில் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக  வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 கார்கள் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. 

கொரோனா பரவல் காரணமாக வேட்பாளரின் ஆதரவாளர்கள் 200 மீட்டருக்கு முன்பு தடுத்து நிறுத்தப்படுவார்கள். 

இதேபோல் முக கவசம் அணிந்தே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. அலுவலகத்துக்கு உள்ளே நுழைவாயிலில் வேட்பாளர்களின் கையில் சனிடைசர் தெளிக்கப்பட்டன. தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

Similar News