உள்ளூர் செய்திகள்
குடிக்க பணம் தர மறுத்து தள்ளிவிட்டதால் தொழிலாளியை கொன்றேன் என கைதான வாலிபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வேலூர்:
வேலூர் ஒல்டுடவுன் எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் சீனிவாசன் (வயது 40). இவர் அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார்.
இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சீனிவாசன் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள பெட்டிக் கடைக்கு நடந்து சென்றார்.
அங்குள்ள மரத்தின் அருகே அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சீனிவாசன் (45) என்பவர் குடிபோதையில் இருந்தார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் முருகேசன் மகன் சீனிவாசன் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் டீக்கடை தொழிலாளி சீனிவாசனின் மார்பு பகுதியில் பலமாக குத்தினார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வேலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சீனிவாசனை கைது செய்தனர்.
நேற்று போதையில் இருந்ததால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. போதை தெளிந்த பிறகு அவரிடம் விசாரணையை தொடங்கினர். அப்போது டீக்கடை தொழிலாளி சீனிவாசனிடம் குடிக்க பணம் கேட்டேன்.அவர் தர மறுத்தார்.
மேலும் என்னை கீழே தள்ளிவிட்டார். ஆத்திரமடைந்த நான் மாங்காய் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்தினேன் என கூறியுள்ளார். தொடர்ந்து சீனிவாசனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.