உள்ளூர் செய்திகள்
வேலூரில் ஓடுதள பணிகள் முடிந்ததும் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும்- கதிர் ஆனந்த் எம்.பி. பேட்டி
ஓடுதள பணிகள் முடிந்ததும் வேலூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று கதிர்ஆனந்த் எம்.பி. கூறினார்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் சுரங்கப் பாதையை கதிர் ஆனந்த் எம்.பி இன்று திறந்து வைத்தார்.அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கு முன்னாடி இருந்தவர்கள் பூமி பூஜை மட்டும் செய்தார்கள். ஆனால் பணிகளை செய்யவில்லை. நான் தேர்தல் நேரத்தில் இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தேன்.
அதன்படி சுரங்கப்பாதை பணிகள் முடிக்கப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்திய அரசிடமிருந்து மக்களுக்காக திட்டங்களை பெறுவதில் தி.மு.க. எப்போதும் முனைப்புடன் செயல்படும்.
குடியாத்தம் புறவழிச்சாலை அமைக்க ரூ.221 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கப்படும். கந்தநேரி வெட்டுவானம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும்.
ஆம்பூர் ராஜீவ் காந்தி சிலை அருகே பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை நடைபெற்றுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.
வேலூர் விமான நிலையத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. ஓடுதளம் அமைக்க கூடுதலாக இடம் தேவைப்படுகிறது. இதற்கான நில அபகரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிரீன் சர்க்கிளில் அகலம் குறைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் நெரிசலுக்கு தீர்வு காணப்படும்.
வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரி அருகே மேம்பாலம் அமைக்க பாராளுமன்றத்தில் வலியுறுத்துவேன். காட்பாடி ரெயில்வே பாலத்தில் சாலை மோசமடைந் துள்ளது.
விரைவில் மாற்று வழி ஏற்பாடு செய்து அந்த பாலம் சீரமைக்கப்படும். கூடுதலாக ஒரு ரெயில்வே மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்றி காட்டுவேன். இவ்வாறு அவர் கூறினார்.