இன்று முழு ஊரடங்கு: ஓசூர் அருகே தமிழக எல்லையில் தீவிர வாகன கண்காணிப்பு
ஓசூர்:
கொரோனா தொற்று கட்டுப்படுத்தலையொட்டி, தமிழகத்தில் 3-வது ஞாயிற்றுக்கிழமையான இன்றும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையொட்டி, அனைத்து சிறிய, பெரியகடைகள் வர்த்தக நிறுவனங்கள், துணிக்கடைகள், டீ கடைகள், பூ மார்க்கெட்டுகள், உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பஸ் போக்குவரத்தும் இல்லாததால் பஸ் நிலையமும் வெறிச்சோடி இருந்தது. மக்கள் நடமாட்டமும் இல்லாததால், சாலைகள் அமைதியாக காணப்பட்டது.
இந்த நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கிருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்களின் எண்ணிக்கை, இன்று காலை முதலே அதிகரித்தவாறு இருந்தது.
ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜுஜுவாடி சோதனைச் சாவடியில், போலீசார் வாகனங்களில் வருபவர்களை தீவிரமாக சோதனையிட்டும், பயணிகளிடம் விசாரித்தும், அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே, மேற் கொண்டு வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.
மேலும், தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தேவையின்றி வாகனங்களில் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.