ஆரணி அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
ஆரணி:
ஆரணி அருகே உள்ள கஸ்தம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 44). இவர் கரிகாத்தூர் பகுதியில் ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மனைவி பவானி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
தம்பதிக்கு மனோஜ் (15), பிரவீன் (13) என 2 மகன்கள் உள்ளனர். சிவப்பிரகாசத்தின் தாயார் மல்லிகா இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று சிவப்பிரகாசமும், பவானியும் வேலைக்கு சென்று விட்டனர். இவரது மகன்கள் பவானியின் தாயார் வீட்டிற்கு சென்று விட்டனர். மல்லிகா அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.17 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
பின்னர் வீடு திரும்பிய சிவப்பிரகாசம் வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் கொள்ளை நடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவப்பிரகாசம் களம்பூர் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.