உள்ளூர் செய்திகள்
வேலூர் தோட்டப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் செய்ததால் காட்பாடி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர்:
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தன.
இதனால் கடந்த 3 மாதங்களாக வேலூர் மாநகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.இதனால் உள்ளூர் குடிநீர் திட்டங்கள் மூலம் மாநகராட்சி பகுதியில் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர்.
மேலும் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தோட்டப் பாளையம் அருகதம்பூண்டி தெரு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.
இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
பலமுறை குடிநீர் கேட்டும் அந்தப் பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காட்பாடி வேலூர் மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் 2-வது மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடனடியாக அந்த பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வருகிற திங்கட்கிழமை முதல் மாநகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் சப்ளை செய்ய வாய்ப்பு உள்ளது. அதற்கு பிறகு 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றனர்.
இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் காட்பாடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.