உள்ளூர் செய்திகள்
ஜவ்வாது மலையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டம் நம்பியம்பட்டு கோவிலூரைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் அளித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த ச.பாலமுருகன், பழனிச்சாமி, மதன்மோகன் ஆகியோர்கள் நம்பியம்பட்டு அருகே அமைந்துள்ள மலையின் முகட்டில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வெண்சாந்து நிறத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
மலை முகட்டில் கிழக்குப்புறமாக அருகருகே உள்ள இரண்டு குகைத்தளங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட வெண்சாந்து நிற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்த பாறை ஓவியங்களை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது:-
முதல் ஓவியத்தில் உருவத்தில் சில வடிவங்கள் ஒருங்கே உள்ளது. அது ஒருவனின் தலை அலங்காரமாக இருப்பது போலவும். அதே சமயம் ஒரு குறியீடு போலவும் உள்ளது என்றும் மேலும் இவ்வடிவத்தை வேட்டைத் தொடர்பான நிகழ்வுகளோடு பொருத்தியியும் பார்க்கலாம்.
இரண்டாம் ஓவியத்தில் மனித உருவம் போல தோற்றம் கொண்ட வரைவு காணப்படுகின்றது. அதில் கையை விரித்த நிலையில் இருப்பது போலவும் ஒரு கையில் ஏதோ ஒன்று வைத்திருப்பது போலவும் உள்ளது. மூன்றாம் உருவத்தில் ஒரு மனித உருவம், நீண்ட தலைப்பாகை போன்ற தோற்றத்துடன் ஒரு கையில் ஆயுதம் ஒன்றை தூக்கிக்கொண்டு நடந்து செல்வது போல காணப்படுகின்றது. நான்காம் உருவத்தில் மனித உருவம் போல ஒன்று காணப்படுகின்றது.
ஒரு கையில் நீண்ட குச்சி போன்ற ஆயுதம் வைத்திருப்பது போல உள்ளது. அதற்கு முன் மிக அழிந்த நிலையில் மாடு போன்ற விலங்கின் தோற்றம் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றது. கீழே மனித உருவம் போன்ற உருவம் கையில் குச்சி போன்ற ஆயுதம் தூக்கி நடந்தும் செல்வது போல உள்ளது. என்றும் கூறியுள்ளார்.
ஜவ்வாதுமலையில் அரியதாக காணப்படும் இந்த ஓவியங்கள் காலப்போக்கில் மழையின் காரணமாகவும் மக்களின் அறியாமையின் காரணமாகவும் சேதமடைந்துள்ளன. பழந்தமிழர்களின் வாழ்வியலுக்கு சான்றாக திகழும் இது போன்ற பாறை ஓவியங்களை வரும் தலைமுறைகள் காணும் பாதுகாத்தும் ஆவணப்படுத்தவும் வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.