உள்ளூர் செய்திகள்
சிவகங்கை தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் பிணம்
சிவகங்கை தெப்பக்குளத்தில் உடலில் காயங்களுடன் ஆண் பிணம் மிதந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை நகரின் மையப்பகுதியில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்தநிலையில் இன்றுகாலை இந்த தெப்பக்குளத்தின் கவுரி விநாயகர் படித்துறை அருகில் சுமார் 35வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தெப்பக்குளத்தில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
அந்த வாலிபரின் முகத்தில் ரத்தக்காயங்கள் காணப்பட்டன. ஆகவே அவரை யாரேனும் மர்மநபர்கள் வேறு எங்கேயாவது வைத்து கொலை செய்துவிட்டு உடலை தெப்பக்குளத்தில் வீசிவிட்டுச் சென்றார்களா? என்பது தெரியவில்லை.
அல்லது அந்த நபராகவே தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த நபர் யார்? என்பதை கண்டறிந்துவிட்டால் எப்படி இறந்தார்? என்பது தெரிந்துவிடும். ஆகவே அவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.