உள்ளூர் செய்திகள்
அறுவடை எந்திரங்களை அரசே எடுத்து மான்ய விலையில் வாடகைக்கு விட வேண்டும்
தனியாரிடமிருந்து மொத்த குத்தகைக்கு அறுவடை எந்திரங்களை அரசே எடுத்து மான்ய விலையில் வாடகைக்கு விட வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி நிறைவடைந்து
அறுவடைப்பணிகள் தொடங்கியுள்ளன. மாவட்டத்தில் அறுவடை
பணிகளை மேறகொள்ள தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால்
விவசாயிகள் அறுவடை எந்திரங்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.
அரசின் வேளாண்மை பொறியியல் துறை மூலம் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு விடப்பட்டாலும், அங்கு போதுமான எந்திரங்கள் இல்லை.
அதனால் தனியாரிடம் இருந்து எந்திரங்களை வாடகைக்கு எடுத்து
அறுவடை செய்ய வேண்டியுள்ளது.
இதற்காக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தனியார்கள் மூலம் எந்திரங்கள் மாத குத்தகைக்கு எடுத்து வரப்பட்டு திருவாரூர் உள்ளிட்ட
காவிரி டெல்டா மாவட்டங்களில் தினசரி வாடகைக்கு விடப்படுகிறது.
சமீபத்தில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் மூலம் விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்கள் உரிமையாளர்களின் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டு கருத்துக்களை கேட்டறிந்ததன் அடிப்படையில்
தனியார் நெல் அறுவடை எந்திரங் களுக்கான வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை எந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.2500 எனவும், டயர் டைப் தனியார் நெல் அறுவடை எந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1800 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வேளாண்மைப் பொறியில் துறை அறுவடை
எந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒருமணி நேரத்திற்கு ரூ.1630 எனவும், டயர் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒருமணி நேரத்திற்கு ரூ.1010 எனவும்
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தனியார் எந்திரங்களுக்கு வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டாலும்
அவசர தேவையினால் அதனைவிட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
தனியார் எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை பெறுவது குறித்து விவசாயிகள் அப்பகுதி வருவாய் கோட்ட அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண்மைதுறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் முற்றிய நெற்கதிர்களை தாமதமின்றி அறுவடை செய்யவேண்டிய நிர்பந்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள எந்திரத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு விவசாயிகள் புகார் தெரிவிக்க விரும்பவில்லை.
இந்த ஆண்டு மழை பாதிப்பு, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட இடர்பாடுகளால் கூடுதல் செலவு செய்தும் குறைந்த மகசூல் கிடைப்பதால் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடுதல் வாடகை செலுத்தி அறுவடை எந்திரம் பயன்படுத்துவது மேலும் இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே அரசே தனியாரிடம் இருந்து எந்திரங்களை மொத்த குத்தகைக்கு எடுத்து மான்ய வாடகையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.