உள்ளூர் செய்திகள்
அடுத்தவர் வீட்டு கதவை தட்டிய வாலிபர் அடித்துக் கொலை
குடிபோதையில் அடுத்தவர் வீட்டு கதவை தட்டியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
திருச்சி :
திருச்சி அண்ணா நகர் பூசாரி தெரு பகுதியில் கடந்த 14&ந்தேதி நள்ளிரவு 27 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் குடிபோதையில் சுற்றிதிரிந்தார். பின்னர் அவர் அங்குள்ள பழ வியாபாரி பாட்டில் மணி வீட்டு அருகாமையில் உள்ள ஒருவரது வீட்டின் கதவைத் தட்டினார்.
அந்த வீட்டில் இருந்தவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் பக்கத்து வீட்டில் இருந்த பாட்டில் மணி கதவு தட்டப்படுவதை கேட்டு திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் அவர் அந்த இளைஞரை துரத்தினார். இதை அடுத்து ஓட்டம் பிடித்த அந்த வாலிபர் சத்திரம் பஸ் நிலையம் அருகே சென்றார்.
பின்னர் பாட்டில் மணி உள்ளிட்ட சிலர் சேர்ந்து சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதில் அந்த இளைஞர் நிலை குலைந்து மயங்கி விழுந்தார்.
சாலையில் காயங்களுடன் கிடந்த அந்த வாலிபரை பயணிகள் 108 ஆம்புலன்சை வரவைத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த இளைஞர் இறந்தார். கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் அரவிந்த் வயது 28 என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. அவரது முகவரி தெரியவில்லை.
இதுகுறித்து மலைக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். முதலில் விபத்தாக இருக்கலாம் என்று கருதிய போலீசார் பின்னர் நடத்திய புலன் விசாரணையில் அரவிந்தன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக பழ வியாபாரி பாட்டில் மணி உள்ளிட்ட 2 பேரை மலைக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.