உள்ளூர் செய்திகள்
பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகளால் இளைஞர்கள் உற்சாகம்
பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடி இளைஞர்கள், பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா பிராந்தனி கிராமத்தில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன.
அப்பகுதி பாரிவள்ளல் இளைஞர் நற்பணி மன்றத்தால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் தினத்தை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப்பொருட்களும் கொடுத்து கௌரவிக்கப்படுகிறது.
அதேபோன்று இந்தாண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஞாபகத்திறனை மேம்படுத்தும் பெண்களுக்கான கோலப்போட்டி, உடல் ஆரோக்கியம் மற்றும் வலிமைக்கான கபாடி போட்டி, பெண்களின் உடல் வலிமைக்கான கோக்கோ போட்டி, தெளிவான சிந்தனைக்கு பானை உடைத்தல் மற்றும் கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து இரண்டு நாட்களாக நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை வென்ற நபர்களுக்கு சில்வர் குடம், தாம் பூலம், சிறுவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கபாடி போட்டியில் வென்றவர்களுக்கு கோப்பை உள்ளிட்டவைகள் போட்டிகளின் இறுதியில் வழங்கப்படவுள்ளது. நிகழ்ச்சியை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.