உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இரவு நேர ஊரடங்கு போன்ற சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருவண்ணாமலையில் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன் கீழ் தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 31.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் ஜனவரி 14 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பௌர்ணமி தினமான ஜனவரி 17 ஆம் தேதி காலை 04.14 மணி முதல் ஜனவரி 18 ஆம் தேதி அதிகாலை 06.00 மணி வரை கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.