உள்ளூர் செய்திகள்
கொரோனா தொற்று

மதுரையில் கொரோனா வேகமாக பரவுகிறது

Published On 2022-01-13 10:19 GMT   |   Update On 2022-01-13 10:19 GMT
மதுரையில் ஒரே நாளில் 498 பேருக்கு கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மதுரை

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 1-ந்தேதி முதல் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2 நாட்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 500 என்ற அளவில் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

நேற்று மட்டும் ஒரே நாளில் 498 பேருக்கு நோய்தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே தீராத காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டோர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

எனவே மாவட்டத்தின் பெரும்பாலான மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இருந்தபோதிலும் மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 52 பேருக்கு நோய் குணமாகி பத்திரமாக வீடு திரும்பி உள்ளனர். 

மதுரை மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2193 பேருக்கு கொரோனா சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இதில் 1550 பேருக்கு வீடுகளிலும், மீதம் உள்ள நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை இதுவரையில் 78 ஆயிரம் பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 74 ஆயிரம்பேர் நோய் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.  1189 பேர் கொரோனா பாதிப்பிற்கு பலியாகி உள்ளனர். 

மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்த போதிலும் பொதுமக்களில் பலர் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது இல்லை.

எனவே  கண்காணிப்புக் குழு அதிகாரிகள் மாநகரம் முழுவதும் வலம் வந்து முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இது தவிர கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2205 படுக்கைகளில் 172 பேருக்கும், 943 சாதாரண படுக்கைகளில் 138 பேருக்கும், 665 தீவிர சிகிச்சை பிரிவு வார்டுகளில் 18 பேருக்கும், 814 படுக்கைகள் அடங்கிய கொரோனா கண்காணிப்பு மையங்களில் 16 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை தமிழக அளவில் கொரோனா பரவல் சதவீதம் 8.9 என்ற அளவில் உள்ளது.
Tags:    

Similar News