உள்ளூர் செய்திகள்
காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

ராஜபாளையத்தில் காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

Published On 2022-01-10 09:49 GMT   |   Update On 2022-01-10 09:49 GMT
ராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராஜபாளையம்

ராஜபாளையம் -சங்கரன்கோவில் விலக்கில் குடிநீர் கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராஜபாளையம் -சங்கரன்கோவில் விலக்கு பகுதியில் 6  தெருக்கள் உள்ளன. 6 தெருக்களிலும் கடந்த 15 தினங்களாக குடிநீர் வரவில்லை. அருகிலுள்ள தோப்புப்பட்டி தெரு, ஸ்ரீரங்கபாளையம் தெரு போன்ற பகுதிகளுக்கு 8 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், இரு வாரங்களாக இந்த 6 தெருக்களிலும் குடிநீர் வராததால் அந்தப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட முடிவு செய்தனர்.   

அதன்படி 6 தெருக்களைச் சேர்ந்த பெண்கள்  இன்று காலை காலிக்குடங்களுடன் சங்கரன் கோவில் விலக்கு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த  ராஜபாளையம் தெற்கு போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வழங்கவும் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல்  போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.  இந்த போராட்டம் காரணமாக அந்தப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சங்கரன் கோவில், திருநெல்வேலி செல்லும் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் பாதிக்கப்பட்டன.
Tags:    

Similar News