உள்ளூர் செய்திகள்
சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்திருவிழா நடத்த கருத்து கேட்பு கூட்டம்
சென்னிமலை யூனியன் ஆபீசில் தைப்பூச தேரோட்ட திருவிழா குறித்து கருத்து கேட்பு கூட்டம் பெருந்துறை தாசில்தார் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது
சென்னிமலை:
சென்னிமலை யூனியன் ஆபீசில் தைப்பூச தேரோட்ட திருவிழா குறித்து கருத்து கேட்பு கூட்டம் பெருந்துறை தாசில்தார் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது
சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அப்போது சென்னிமலை நகரில் தேரோட்டம் மற்றும் விழாக்கள் 15 நாட்கள் மிக விமரிசையாக நடைபெறும்.
ஆனால், தற்பொழுது கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அடைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னி மலையில் தைப்பூச தேரோட்ட விழா நடை பெறுமா? என்பது கேள்விக் குறியாக உள்ளது.
இந்நிலையில் சென்னிமலை யூனியன் ஆபீசில் தைப்பூச தேரோட்ட திருவிழா குறித்து கருத்து கேட்பு கூட்டம் பெருந்துறை தாசில்தார் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னி மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், சென்னிமலை யூனியன் சேர்மன் காயத்ரி இளங்கோ, துணை சேர்மன் பன்னீர்செல்வம், மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.எஸ்.,செல்வம், இன்ஸ்பெக்டர் சரவணன், வருவாய் ஆய்வாளர் முத்துலட்சுமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவில் மண்டப கட்டளைதாரர்கள் தரப்பில் பூந்துறை முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், வெள்ளோடு, பூந்துறை, நசியனூர், எழுமாத்தூர் ஆகிய நான்கு நாட்டு மண்டப கட்டளை மற்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மண்டப கட்டளை நிர்வாகிகள், திருவிழா உபயதாரர்கள், நன்கொடையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள், கோவிலில் செயல்படும் பல்வேறு கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ஆண்டு தோறும் நடைபெறும் விழாவைப் போல இவ்வாண்டும் தைப்பூச தேரோட்ட திருவிழா நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், அவர்களது கருத்துகளை கேட்டு பதிவு செய்தனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட் டத்தில் கலந்துகொண்ட பல்வேறு மண்டபக் கட்டளை தாரர்கள், உபயதாரர்கள் உட்பட பல்வேறு தரப்பின் நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பிய பின் அரசு உத்தரவை பின்பற்றி மாவட்ட கலெக்டர் இது குறித்து இறுதி முடிவு எடுப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே தேரோட்ட விழா நடைபெறுமா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும். இந்த கருத்து கேட்பு கூட்டத்தால் நாளை சென்னிமலையில் நடைபெற இருந்த உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் விலக்கிக் கொள்வதாக முருக பக்தர்கள் அறிவித்துள்ளனர்.