உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது- அம்மா உணவகங்களில் பார்சல்களில் உணவு விநியோகம்
முழு ஊரடங்கையொட்டி பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இத்துடன் சேர்ந்து ஒமைக்ரான் தொற்றும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் தமிழக அரசு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் ஓடவில்லை.
மாநகர் பகுதியில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர் செல்வம் பார்க் பகுதி, காளைமாடு சிலை, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், ஜி.எச். ரவுண்டானா, ரெயில் நிலையம், பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, நசியனூர் ரோடு போன்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஈரோடு வ. உ. சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் சம்பத் நகர் பெரியார் நகரில் உள்ள உழவர் சந்தைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள ஜவுளி சந்தை அடைக்கப்பட்டிருந்தன.
ஆனால் அதே நேரம் அம்மா உணவகங்கள் இன்று வழக்கம் போல் செயல்பட்டன. ஆனால் உணவங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது அவர்களுக்கு பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. மாநகர் பகுதியில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் இன்று காலை வழக்கம் போல் செயல்பட்டன. பார்சலில் உணவு உணவு வழங்கப்பட்டன.
இதேபோல் ஓட்டல்களிலும் பார்சலில் உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தன. பெரிய ஓட்டல்களில் ஆன்லைன் ஆர்டர் மூலம் சேவை வழங்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்களான பால் சேவைகள் வழக்கம் போல் நடைபெற்றன. ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கின.
முழு ஊரடங்கையொட்டி பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் அங்கும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடி காணப்பட்டது. இதே போல் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர், பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி, மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.