உள்ளூர் செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் முழு ஊரடங்கிலும் வழக்கம்போல் பாதயாத்திரை சென்ற பக்தர்கள்
இன்று முழு ஊரடங்கையொட்டி தென்காசி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பாதயாத்திரை பக்தர்கள் வழக்கம்போல் நடந்து கோவிலுக்கு சென்றனர்.
தென்காசி:
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கடந்த 6-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது.
மேலும் அந்த நேரத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கும் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்ட நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை.
அவர்கள் வழக்கம்போல் சாலையில் அதிக அளவில் பாதயாத்திரையாக நடந்து சென்றதை பார்க்க முடிந்தது.
அவர்களுக்கு போலீசார் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுரை வழங்கினர்.