உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கோபிசெட்டிபாளையத்தில் சட்ட கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2022-01-07 04:13 GMT   |   Update On 2022-01-07 04:13 GMT
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கணவருடன் விவாகரத்தானதால் மனம் உடைந்த சட்ட கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் மெகபூப் பாஷா. இவரது மகள் சாஹினா பீவி (வயது 30). இவர் கோவை அரசு சட்ட கல்லூரியில் பி.எல். இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கும் முகமது உவைஸ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சாஹினா பீவி மற்றும் அவரது கணவர் முகமது உவைஸ்க்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் கடந்த 2018-ம் ஆண்டு சாஹினா பீவி கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து உறுதியானது. இதனால் சாஹினா பீவி தன் மகனை எப்படி காப்பாற்றுவது என மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சாஹினா பீவி தேர்வுக்கு படிப்பதாக கூறி தனது வீட்டின் 2-வது மாடியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது அவரை டீ குடிக்க அழைத்தனர். நீண்ட நேரம் அழைத்தும் அவர் கீழே இறங்கி வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை மெகபூப் பாஷா சென்று பார்த்தார். அப்போது அவர் இருந்த அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை திறந்து பார்த்தபோது சாஹினா பீவி தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார்.

அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாஹினா பீவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News