உள்ளூர் செய்திகள்
ஆரணியில் மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா
ஆரணியில் மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா பரவியதால் பள்ளி மூடப்பட்டது.
ஆரணி:-
ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ- மாணவிகள் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
தலைமையாசிரியர் உள்பட ஆசிரிய-ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு 1 முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளது.
ஆனால் 10 மற்றும் 11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9,10 மற்றும் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தபட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று 9-ம் வகுப்பு படிக்கும் 150 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை பள்ளியிலேயே எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையின் முடிவில் 9-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையொடுத்து பள்ளி மாணவ மாணவிகளை உடனடியாக 2 நாட்கள் விடுமுறை அளித்து அனுப்பி வைத்தனர்.
ஆரணியில் 9-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கி உள்ளது.