உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் சமூக இடைவெளி இல்லாமல் பஸ்சில் பயணம் செய்த பயணிகள்.

பஸ்களில் சமூக இடைவெளியின்றி பயணித்த மக்கள்

Published On 2022-01-06 15:24 IST   |   Update On 2022-01-06 15:24:00 IST
ஈரோட்டில் இன்று பஸ்களில் சமூக இடைவெளியின்றி கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
ஈரோடு:

ஈரோட்டில் இன்று பஸ்களில் சமூக இடைவெளியின்றி கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் ஒமைக்ரான் பாதிப்பும் சேர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும்  அமலுக்கு வந்துள்ளன. முக்கியமாக பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 13 பணிமனைகளில் இருந்து தினமும் 780-க்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும், உள்ளூருக்கும் இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று முதல் பஸ்சில் பயணம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. முககவசம் அணியாமல் வந்த பயணிகள் பஸ்சில் ஏற அனுமதிக்கப்படவில்லை. 

ஆனால் அதே சமயம் பெரும்பாலான பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக மாநகர் பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களில் பெண்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. சமூக இடைவெளியும் காற்றில் பறந்தது.

கல்லூரிகளுக்கு வரும் 20-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஈரோட்டில் பல்வேறு கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று அதிகஅளவில் பஸ்நிலையத்திற்கு வந்திருந்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. 

குறிப்பிட்ட சில ஊர்களுக்கு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் அந்த பஸ்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கோவை, சேலம், கரூர், மதுரை போன்ற வெளிமாவட்டங்களில் இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் உட்கார்ந்து செல்லும்  வகையில் இயக்கப்பட்டன. நின்று செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Similar News