உள்ளூர் செய்திகள்
சாரண, சாரணியர்களுக்கு ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு
முதன்மை தேர்வாளரும் மாவட்ட சாரணிய அமைப்பு ஆணையருமான சர்க்கார் சாமக்குளம் அமானுல்லா தேர்வை தொடங்கி வைத்தார்.
திருப்பூர்:
சாரண, சாரணியர்களுக்கு ராஜ்ய புரஸ்கார் எனும் கவர்னர் விருதுக்கான தேர்வு பொங்குபாளையம் சக்தி விக்னேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 142 சாரணர், 103 சாரணியர்கள் என மொத்தம் 245 மாணவர்கள் பங்கேற்றனர்.
மாநில சாரண, சாரணிய அமைப்பு ஆணையர் சண்முக நாச்சியார் உறுதிமொழி ஏற்று தொடங்கி வைத்தார். முதன்மை தேர்வாளரும் மாவட்ட சாரணிய அமைப்பு ஆணையருமான சர்க்கார் சாமக்குளம் அமானுல்லா தேர்வை தொடங்கி வைத்தார்.
மேலும் 20 சாரண ஆசிரியர்கள், 15 சாரணிய ஆசிரியைகள் பங்கேற்றனர். காலை வாய்மொழித் தேர்வும், மதியம் எழுத்துத் தேர்வும், செய்முறை தேர்வுகளும் நடந்தது.
முகாமில் முதலுதவி செய்வது எப்படி, கயிறை கொண்டு பல்வேறு முடிச்சுகள் போடுவது, சிக்னல், வரைபடங்கள் ஆகியவற்றுக்கான தேர்வு நடந்தது. மாநில சாரண, சாரணிய உதவி செயலாளர் மனோகரன் ஆலோசனை வழங்கினார்.
முகாம் ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட சாரண, சாரணியர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட உதவி ஆணையருமான ராஜாராம், மாவட்ட செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் தனசிங் ஆகியோர் செய்திருந்தனர்.