உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் 10 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
ஈரோட்டில் முதற்கட்டமாக 10 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஈரோடு:
ஈரோட்டில் முதற்கட்டமாக 10 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயது வரை உடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது.
சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பணியை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் முத்துசாமி 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 523 பள்ளிகளில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 260 சிறுவர்கள் உள்ளனர்.
நேற்று முதல் கட்டமாக 92 பள்ளிகளில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. சிறுவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்து 915 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து இன்று 2-வது நாளாக பள்ளிகளில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.