உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஈரோட்டுக்கு வந்த 324 பேருக்கு 2-ம் கட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை

Published On 2022-01-03 09:47 IST   |   Update On 2022-01-03 09:47:00 IST
கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் வெளிநாட்டில் இருந்து ஈரோட்டுக்கு வருபவர்கள் அவரவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஈரோடு:

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கம் இன்னும் முழுவதுமாக முடிவுக்கு வரவில்லை. அவ்வப்போது கொரோனா உருமாற்றம் அடைந்து மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவத் தொடங்கியது. இது மற்ற வைரசை விட பரவும் தன்மை அதிகம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கு ஏற்றது போல் ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் தற்போது எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

இதனால் மத்திய, மாநில சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து மாவட்ட கலெக்டர்களும், சுகாதாரத்துறையினரும் உஷார்படுத்தப்பட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் அவர்களுக்கு இரண்டாவது கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் பாதிப்பு இல்லை என முடிவு வந்தால் தான் அவர்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன்படி கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் வெளிநாட்டில் இருந்து ஈரோட்டுக்கு வருபவர்கள் அவரவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரு வாரம் கழித்து மீண்டும் இரண்டாம் கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பாதிப்பு இல்லை என்று முடிவு வருபவர்கள் மட்டுமே வெளியே நடமாட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் நேற்று வரை 360 பேர் பல்வேறு நாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இதில் 324 பேருக்கு 2-வது கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. மேலும் 36 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் இரண்டாவது கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News