உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதற்கான டோக்கனை வீடுகளுக்கே சென்று வழங்கினர்.

பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்

Published On 2022-01-02 14:33 IST   |   Update On 2022-01-02 14:33:00 IST
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வரும் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கினர்.
ஈரோடு:

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை)  முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
 
சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பணியை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் ரேஷன் கார்டுகள் 1,381 என மொத்தம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 153 ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் 4-ந் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.   இதற்காக ரேஷன்கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று  டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர்.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள்  வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகித்து வருகின்றனர்.

நாளொன்றுக்கு 200 பேர் வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கொரோனா தாக்கம் காரணமாக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

டோக்கன்  கொடுக்கும் போதே  சம்பந்தப்பட்டவர்கள் எந்த தேதியில் வரவேண்டும் எந்த நேரத்திற்கு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

வரும்   31-ந் தேதி வரை  ரேஷன் கடை களில் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   

இதையடுத்து ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டு வருகிறது. பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News