உள்ளூர் செய்திகள்
பிரபல மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் கைது
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் ஆற்றுப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் பிரபல மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் ஆற்றுப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் பிரபல மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொடுமுடி பாசூர் ஆற்றுப்பாலம் பகுதியில் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர் சவுரியூர் பகுதியை சேர்ந்த முருகேஷ் (32), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஈச்சம்பள்ளம் பகுதியை சேர்ந்த கார்த்தி (27) என தெரியவந்தது.
அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் கருவேலம்பாளையம் காவிரி கரை பகுதியில் இருந்து திருடி கொண்டு வந்தது தெரியவந்தது.
மேலும் அவர்கள் கொடுமுடி, மலையம்பாளையம், சிவகிரி, பெருந்துறை உள்பட பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கொடுமுடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.