உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் 56 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தம்
ஈரோட்டில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் 56 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஈரோடு:
ஈரோட்டில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் 56 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் காக்கும் கரங்கள் அமைப்பு தொடங்கப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமங்களில் 3625 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் பயனாக மாவட்டம் முழுவதும் 56 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் லேடிஸ் பர்ஸ்ட் மற்றும் ஹலோ சீனியர் உதவி மையத்தின் மூலம் பெண்கள் மற்றும் முதியவர்கள் சார்பில் பெறப்பட்ட 2,444 முறையீட்டு அழைப்புகளில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 118 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சாலைவிபத்துகளைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சாலைவிதிமுறைகளை மீறிய 6 லட்சத்து 3 ஆயிரத்து 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு கோடியே 24 லட்சத்து 4 ஆயிரத்து 320 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 25 ஆயிரத்து 222 ஓட்டுனர்கள் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 22,151 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.விபத்து மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 11 ஆயிரத்து 587 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 23 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்தார்.