உள்ளூர் செய்திகள்
வரதட்சணை வழக்கில் கைதான அரசு ஆஸ்பத்திரி டாக்டர் நெஞ்சு வலிப்பதாக ரகளை - போலீசார் சிறையில் அடைத்தனர்
அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல், ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா சரோனா (வயது 35). இவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள இடையன்கோடு பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவருடைய மகன் அனூப் (36) என்பவருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
அனூப் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள எடக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திவ்யா சரோனாவின் திருமணத்தின் போது 117 பவுன் நகை, ரூ.32 லட்சத்தை அவரது பெற்றோர் சீர்வரிசையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அனூப், மனைவியிடம் மேலும் ரூ.10 லட்சம் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் டாக்டர் அனூப்புக்கும், வேறொரு பெண் டாக்டருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், திவ்யா சரோனாவுக்கு வழங்கப்பட்ட 117 பவுன் நகை மற்றும் ரூ.32 லட்சத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுத்துக் கொண்டு அவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் டாக்டர் திவ்யா சரோனா ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.
பின்னர் இது தொடர்பாக ஈரோடு கூடுதல் மகளிர் விரைவு கோர்ட் உத்தரவின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் வழக்கு விசாரணை தாமதம் ஏற்பட்டதால் டாக்டர் திவ்யா சரோனா தரப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டாக்டர் திவ்யா சரோனாவின் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலாவதி, டாக்டர் அனூப் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல், ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அதன் பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக டாக்டர் அனூப்பை போலீசார் நேற்று இரவு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர் அனூப் தனக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் தனக்கு ஆக்சிஜன் பொருத்த வேண்டும் என்றும் கூறினார்.
பின்னர் சிறிது நேரத்தில் திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் எனவே அதற்க சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறினார். இதனால் மருத்துமனையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்தனர். இருந்தாலும் அவர் தொடர்ந்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
சுமார் ஒரு மணி நேரம் மருத்துவமனையில் அவர் ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்தனர். அதன் பின்னர் டாக்டர் அனூப்புக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.