உள்ளூர் செய்திகள்
கொலை

அறச்சலூர் அருகே முன் விரோத தகராறில் டெய்லர் அடித்து கொலை

Published On 2021-12-31 12:01 IST   |   Update On 2021-12-31 12:01:00 IST
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே முன் விரோத தகராறில் டெய்லர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக தி.மு.க. முன்னாள் கவுன்சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள நாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (50). டெய்லர். இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

தி.மு.க. வார்டு செயலாளராக இருந்த வடிவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதாவில் இணைந்து விட்டார். இதனால் வடிவேலுக்கும் அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தம்பி என்கிற ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு நாகராஜபுரம் பகுதியில் உள்ள தலவுமலை விநாயகர் கோவிலில் வடிவேல் மற்றும் சிலர் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஈஸ்வரமூர்த்திக்கும் வடிவேலுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

அப்போது திடீரென அவர்கள் மோதிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரமூர்த்தி கீழே கிடந்த கல்லால் வடிவேலை சரமாரியாக தாக்கி உள்ளார்.

இதில் வடிவேல் மயக்கம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர். பின்னர் 2 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வீட்டிற்கு சென்று வடிவேல் இரவு படுத்து தூங்கினார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திரிக்கவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவர் அருகே சென்று பார்த்தபோது வடிவேல் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

இதையடுத்து வடிவேலின் குடும்பத்தினர் அறச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வடிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்தியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News