உள்ளூர் செய்திகள்
அறுவடை பணிகள் தீவிரம் - உடுமலை விற்பனைக் கூடத்துக்கு மக்காச்சோள வரத்து அதிகரிப்பு
மக்காச்சோளத்தை காய வைத்து விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு வரத்து அதிகரித்துள்ளது.
உடுமலை:
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. தொடர் மழையால் அறுவடை பணிகள் குறித்த நேரத்தில் துவங்கவில்லை. மழை இடைவெளி விட்டதும் தற்போது அறுவடை தீவிரமடைந்துள்ளது.
இதையடுத்து மக்காச்சோளத்தை காய வைத்து விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு வரத்து அதிகரித்துள்ளது. வளாகத்திலுள்ள உலர்களங்களில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளத்தை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி மக்காச்சோளம் 100 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.1,690 வரை விலை கிடைத்தது. படைப்புழு தாக்குதல் உட்பட நோய்த்தாக்குதல்களால் மகசூல் வெகுவாக குறைந்துள்ள நிலையில் விலையும் குறைந்துள்ளது விவசாயிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
எனவே நடப்பு சீசனில் மக்காச்சோளம் அதிக அளவு இருப்பு செய்யப்படும் வாய்ப்புள்ளது. அதற்கேற்ப ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் குடோன்களும் தயார்படுத்தப்பட்டு வருகிறது.