உள்ளூர் செய்திகள்
உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த சில தினங்களாக 80 முதல் 90 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
உடுமலை:
உடுமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகலில் கடும் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் காணப்படுகிறது. காலநிலையில் மாற்றம் ஏற்படுவதால் பலரும் சளி, காய்ச்சல் மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு பெறுவோர் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
இதனால் உடுமலை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சைக்காக தனியாக பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் கடந்த சில தினங்களாக 80 முதல் 90 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவப்பணிகள் துறையினர் கூறியதாவது:
மருத்துவமனையில் தனியாக காய்ச்சல் வார்டு அமைக்கப்படுவதுடன் நோயாளிகளின் நலன் கருதி கட்டில்கள் தோறும் தனித்தனியாக கொசு வலையும் அமைக்கப்படுகிறது. அதேநேரம் மருத்துவமனை வார்டுகளில் தூய்மைப்பணி முடுக்கி விடப்படுகிறது.
காய்ச்சல் நோயாளி மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தார் இடையே நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வழக்கமாக புறநோயாளியாக 25 பேர் வரை காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவர். தற்போது அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.