உள்ளூர் செய்திகள்
மஞ்சப்பைகள்

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சப்பைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

Published On 2021-12-28 16:05 IST   |   Update On 2021-12-28 16:14:00 IST
பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக மஞ்சப்பை தயாரிக்கும் பணி ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் ஊராட்சிக்கோட்டை உள்ளி ட்ட பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு:

தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு கொரோனா தாக்கம் காரணமாக இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் சுற்றுச்சூழல் பாதுகாப்புகாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பிளாஸ்டிக் பை சுற்றுச்சூழலுக்கு கேடு என்ற பரப்புரை தீவிரப்படுத்தப்பட்டது.

இதையடுத்து மீண்டும் துணிப்பைகளை கொண்டு செல்லும் பழக்கம் அதிகரித்தது. தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந் தேதி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம் உள்பட 20 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. பொங்கல் தொகுப்புகள் மஞ்சப் பைகளில் வைத்து வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் 2 கோடிக்கும் மேற்பட்ட அட்டை தாரர்களுக்கு ஜனவரி 3-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.

இதையொட்டி பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக மஞ்சப்பை தயாரிக்கும் பணி ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் ஊராட்சிக்கோட்டை உள்ளி ட்ட பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிலர் வீடுகளிலும் மேலும் பலர் குழுவாக சேர்ந்து பைகளை தயாரித்து வருகின்றனர்.

பவானி சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட துணி பைகள் தயாரிக்க ஆர்டர்கள் வந்து உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் பைகள் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி மற்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மஞ்சள் பை தயாரிக்கும் ஆர்டர் பெற்றிருக்கும் நாகராஜ் என்பவர் கூறும் போது:-

தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளது. இந்த மஞ்சள் பையை பொங்கல் தொகுப்புடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 80 லட்சம் மஞ்சள் பைகள் தயாரிக்கும் ஆர்டர் கிடைத்து உள்ளது. தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. 20 வகையான பொருட்கள் வழங்கப்பட உள்ளதால் பைகள் கனமாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மஞ்சள் பைகள் ஒவ்வொன்றும் 15 முதல் 20 கிலோ எடையுள்ள பொருட்கள் தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

Similar News