உள்ளூர் செய்திகள்
மீட்பு

சிவகங்கையில் மாயமான சிறுவன் திருச்செந்தூரில் மீட்பு

Published On 2021-12-27 14:23 IST   |   Update On 2021-12-27 14:23:00 IST
சிவகங்கை போலீசார் திருச்செந்தூர் சென்று சித்தார்த்தை அழைத்துவர சென்றுள்ளனர். சித்தார்த் வந்த பின்னர் தான் அவர் எப்படி அங்கு சென்றார் என்பது தெரியவரும்.
சிவகங்கை:

சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்தவர் பழனிவேல். இவர் இந்திய ராணுவத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரிகிறார். இவருக்கு 2 மகன்கள். இவரது 2-வது மகன் சித்தார்த் (வயது13) சிவகங்கையில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சித்தார்த் நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான் திடீரென்று அவனை காணவில்லை.

தொடர்ந்து அவனது தாயார் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினார்கள். சித்தார்த்தை எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவனது தாயார் சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சித்தார்த் திருச்செந்தூரில் உள்ள கடற்கரையில் இருந்துள்ளார். இதை பார்த்த அங்கிருந்த கடைக்காரர் ஒருவர் சித்தார்த்தை மீட்டு அங்குள்ள புறக்காவல் நிலைய போலீசில் ஒப்படைத்தார்.

அவர் மீட்கப்பட்ட தகவலை திருச்செந்தூர் போலீசார் சிவகங்கை காவல் நிலையத்தில் தெரிவித்தனர். இதையடுத்து சிவகங்கை போலீசார் திருச்செந்தூர் சென்று சித்தார்த்தை அழைத்துவர சென்றுள்ளனர். சித்தார்த் வந்த பின்னர் தான் அவர் எப்படி அங்கு சென்றார் என்பது தெரியவரும்.

Similar News