உள்ளூர் செய்திகள்
முதியவர் மீது மோதிய அரசு பஸ் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பெருமாநல்லூர் அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி - பொதுமக்கள் போராட்டம்

Published On 2021-12-27 13:26 IST   |   Update On 2021-12-27 13:26:00 IST
விபத்துக்குள்ளான பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை துரத்தி சென்று பெருமாநல்லூரில் சிறைப்பிடித்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர் அருகே அப்பியாபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாறன் ( வயது 60). விவசாயி கூலித் தொழிலாளி. இவர் நேற்று இரவு அப்பியாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடை முன் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.
 
அப்போது நம்பியூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து (வழித்தட எண் 26) மற்றொரு பேருந்தை முந்தி சென்று இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பலத்த காயமடைந்த மாறன் உயிரிழந்தார். மேலும் விபத்துக்குள்ளான பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை துரத்தி சென்று பெருமாநல்லூரில் சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த பெருமாநல்லூர் போலீசார் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷமிட்டனர். 

உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறிய போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Similar News