உள்ளூர் செய்திகள்
ஈரோடு பஸ் நிலையம் அருகே தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள கட்டுமான பொருட்கள் கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையம் அருகில் சத்தி ரோடு பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் 4 கடைகள் வரிசையாக உள்ளன.
இந்த கடைகளில் கட்டுமானத்திற்கு தேவையான டைல்ஸ், பெயிண்ட், கதவுகள், ஜன்னல்கள், மின் இணைப்புக்கு பயன்படும் பொருட்கள், குளியலறை-கழிப்பறை வடிவமைப்பு பொருட்கள், பிளாஸ்டிக் குழாய்கள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து கரும்புகை வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். மேலும், ஈரோடு டவுன் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீயை கட்டுக்குள் கொண்டுவர அதிகாலை வரை தீயணைப்பு வீரர்கள் போராடினார்கள். இந்த பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
இதையும் படியுங்கள்...தமிழகம் முழுவதும் இன்று 16-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது