உள்ளூர் செய்திகள்
காங்கயம் அருகே தம்பதி கொலை- கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
கடந்த 15-ந்தேதி பழனிசாமியும், வள்ளியம்மாளும் ரத்த காயங்களுடன் கிடந்தனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரங்கம்பாளையம், வண்ணாம்பாறை காட்டுப்பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, (வயது 72). இவரது மனைவி வள்ளியம்மாள் (68). இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணமாகிவிட்டது. முதிய தம்பதியர் வண்ணாம்பாறையில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து வந்தனர்.
கடந்த 15-ந்தேதி பழனிசாமியும், வள்ளியம்மாளும் ரத்த காயங்களுடன் கிடந்தனர்.
தலையில் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து 7 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.கொலையில் தொடர்புடைய நபர்களை பிடிக்க காங்கயம் டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடக்கிறது.
இந்த சம்பவத்தில் வடமாநில கும்பல் ஈடுபட்டிருக்கலாம்என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அப்பகுதியில் தங்கி பல்வேறு வேலைகளுக்கு சென்று வரும் வடமாநிலத்தினரின் விபரங்கள் போன்றவற்றை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
உறவினர், வெளிநபர்களிடையே முன்விரோதம் ஏதாவது உள்ளதா? எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
இருப்பினும் கடந்த ஒரு வாரமாக விசாரித்தும் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.