உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

புதிய விவசாய மின் இணைப்பு - வழிகாட்டு முறைகள் அறிவிப்பு

Published On 2021-12-20 14:47 IST   |   Update On 2021-12-20 14:47:00 IST
பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அறிவிப்பு கடிதம் வழங்கப்படும்.
பல்லடம்:

புதிய விவசாய மின் இணைப்பு பெற திட்ட வழிகாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், காங்கயம், தாராபுரம்,மின் கோட்டங்களில் விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .

இதன்படி சாதாரண வரிசையில் மின் இணைப்பு பெற கடந்த 1.4.2006 முதல் 31.3.2013 வரை சாதாரண வரிசையில் விவசாய மின் இணைப்பு மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் அந்தந்த பகுதியில் உள்ள செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு 30 நாள் அறிவிப்பு கடிதம் பெற்று தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்.

சுயநிதி திட்டம் ரூ.10 ஆயிரம்  திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற 1.4.2013 முதல் 31.3.2014 வரை விவசாய மின் இணைப்பு விண்ணப்பம் பதிவு செய்து ரூ .500 மதிப்பீட்டுத் தொகை செலுத்தி உள்ள விண்ணப்பதாரர்கள் ரூ.10 ஆயிரம் செலுத்தி சுயநிதி திட்டத்தில் மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் .

சுயநிதி திட்டம் ரூ.25 ஆயிரம் அல்லது ரூ.50 ஆயிரம் இந்த திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற 1.4.2014 முதல் 31.3.2018 வரை விவசாய மின் இணைப்பு விண்ணப்பம் பதிவு செய்து ரூ .500 மதிப்பீட்டுத் தொகை செலுத்தி உள்ள விண்ணப்பதாரர்கள் ரூ.25 ஆயிரம் அல்லது ரூ.50 ஆயிரம் செலுத்தி சுயநிதி திட்டத்தில் மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்.

மேற்கண்ட ஆண்டுகளில் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அறிவிப்பு கடிதம் வழங்கப்படும். 

எனவே விவசாய விண்ணப்பதாரர்கள் சமீபத்திய தேதியில் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட உரிமைச்சான்று, மின் இணைப்புக் கோரும் கிணற்றின் இருப்பிடத்தை குறிக்கும் வரைபடம் போன்ற ஆவணங்களுடன் தங்கள் பகுதிக்குட்பட்ட மின்வாரிய செயற்பொறியாளரை அணுகி விவசாய மின் இணைப்பை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் விபரங்களுக்கு பல்லடம் செயற்பொறியாளர்: 9445851217, காங்கேயம் : 9445852010, தாராபுரம் : 9445851562 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News