உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே விபத்தில் வாலிபர் பலி
வேலை முடிந்து இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பல்லடம்:
திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் ராகுல் (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பொள்ளாச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் நாகேந்திரன் (19) என்பவரும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் வேலை முடிந்து இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிள் பல்லடத்தை அடுத்த வெங்கிட்டாபுரம் தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடம் வந்து விபத்தில் சிக்கிய இருவரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராகுல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த நாகேந்திரனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.