நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தயிர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (45). விவசாயி. இவரது மனைவி ஷோபனா (41). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இரவு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஷோபனாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கணவர் வேலுசாமி வீட்டில் இருந்த அரிவாளால் அவரை தலை மற்றும் வலது கை ஆகிய இடங்களில் வெட்டினார்.
இதில் ஷோபனாவின் கை விரல் துண்டானது. மேலும் அரிவாளால் வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.
இதைபார்த்த வேலுசாமி வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஷோபனாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேலுசாமியை தேடி வருகிறார்கள்.