உள்ளூர் செய்திகள்
வனப்பகுதியில் கொசுக்கள் தொல்லையால் உடுமலை - மூணாறு சாலையில் உலா வரும் யானைகள்
மிரட்சி அடையும் யானைகள் வாகன ஓட்டிகளை துரத்தும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்தநிலையில் வனப்பகுதியில் கொசுக்கள் அதிகரித்து உள்ளதால் யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உடுமலை - மூணார் சாலையில் உலா வருகின்றன. குட்டியுடன் முகாமிடும் காட்டு யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் சாலைக்கு வருவதுமாக உள்ளது.
அப்போது மிரட்சி அடையும் யானைகள் வாகன ஓட்டிகளை துரத்தும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இதனால் உடுமலை-மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும் சமயத்தில், அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.