உள்ளூர் செய்திகள்
திருப்பூர் கோவிலில் சாமி சிலைகளை சேதப்படுத்திய கும்பல்
இன்று காலை கோவில் பூசாரி நாகராஜ் சென்ற போது அனைத்தும் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
திருப்பூர்:
திருப்பூர் விஜயாபுரத்தை அடுத்துள்ள யாசின் பாபு நகர் செல்லும் மெயின் சாலையில் சாலையோரம் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த விநாயகர், கருப்பராயன் சிலை, கோவில் அருகில் நடப்பட்டிருந்த வேல் உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இன்று காலை கோவில் பூசாரி நாகராஜ் சென்ற போது அனைத்தும் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த இந்து முன்னணி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டனர். மேலும் இதுகுறித்து நல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு தெற்கு தாசில்தார் ராஜ குமார், போலீஸ் உதவி கமிஷனர் ரவி, நல்லூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ், நல்லூர் வருவாய் ஆய்வாளர் பத்மப்ரியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். கோவிலை பூட்டி விட்டு சென்றதும் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையடிக்கும் நோக்கில் வந்தவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டனரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.