உள்ளூர் செய்திகள்
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனக்காவலர்கள்.

உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

Published On 2021-12-09 07:42 GMT   |   Update On 2021-12-09 07:42 GMT
வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
உடுமலை:

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகு பூனை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குளிர்கால கணக்கெடுப்பு பணிகள் கடந்த 4-ந் தேதி பயிற்சியுடன் தொடங்கியது.

உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம் வந்தரவு வனச்சரகங்களில் உள்ள 34 சுற்றுகளில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டு கணக்கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது. 

வனப்பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் 3 நாட்கள் சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை  மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் முதல் நேர்கோட்டுப்பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடி குளம்பினங்கள், பறவைகள், மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து வனத்துறையினர் பதிவு செய்து வருகின்றனர். 

மேலும் யானை லத்தி, காட்டெருமை சாணம், புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, அனுமன்மந்தி, நீலகிரிமந்தி, சிங்கவால்குரங்கு ஆகியவற்றின் புழுக்கை மற்றும் சாணங்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவரவகைகளும் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இறுதி நாளான நாளை மறுநாள் 11 -ந் தேதி கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். உடுமலை வனச்சரகம் கரட்டூர் பிரிவு நல்லார் சரகப்பகுதியில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணிகளை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் க.கணேஷ்ராம் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு சிறுத்தையின் காலடித்தடம் கண்டறியப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் போது வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உடனிருந்தனர். 
Tags:    

Similar News