உள்ளூர் செய்திகள்
உடுமலையில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுமான பணி-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
கூடுதல் பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மடத்துக்குளம்:
உடுமலை பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் பஸ் நிலையத்தை அடுத்துள்ள வி.பி.புரம் காலியிடத்தில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி நகராட்சியின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதில் இந்த காலி இடத்தில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூ. 3 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் பஸ் நிலையம் அமைக்க கட்டிட கட்டுமான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி கூடுதல் பஸ் நிலைய கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் முன்னிலை வகித்தார்.
விழாவில் உடுமலை ஆர்.டி.ஓ.கீதா, தாசில்தார் ராமலிங்கம், முன்னால் மடத்துக்குளம் எம்.எல்.ஏ வும், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான இரா.ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகர தி.மு.க. செயலாளர் எம்.மத்தீன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முபாரக்அலி, நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், பொறியாளர் மோகன், உதவி பொறியாளர் மாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.