காட்பாடியில் மகளிர் குழுக்களிடம் ரூ.34 லட்சம் வசூல் மோசடி
வேலூர்:
காட்பாடியில் உள்ள நபார்டு வங்கி கட்டுப்பாட்டிலுள்ள வங்கி மூலம் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த வங்கியிலிருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுவினருக்கு பல லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
வேலூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஜமுனாமரத்தூர் ஏரிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (வயது61) மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் தாட்சியாயினி (39), செல்வி (47) வினோதினி, ராஜம்மாள் ஆகியோர் மகளிர் குழுக்களிடம் பணத்தை வசூல் செய்து வங்கியில் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2020 முதல் 2021 செப்டம்பர் மாதம் வரை மகளிர் குழுக்களிடம் பணம் வசூல் செய்துள்ளனர்.
ஆனால் இந்த பணத்தை வங்கியில் கட்டவில்லை. வங்கி ஊழியர்கள் மகளிர் குழுக்கள் கடனுதவி குறித்து தணிக்கை செய்தனர்.அப்போது கோவிந்தன் மற்றும் அவரது தொண்டு நிறுவன நிர்வாகிகள் சேர்ந்து ரூ.34 லட்சத்து 73 ஆயிரத்து 287 வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக காட்பாடி வங்கி மேலாளர் லோகநாதன் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோவிந்தன், தாட்சியாயினி, செல்வி ஆகியோரை கைது செய்தனர். வினோதினி, ராஜம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனர்.