செய்திகள்
மரணம்

தஞ்சை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் மரணம்

Published On 2021-11-25 16:55 IST   |   Update On 2021-11-25 16:55:00 IST
தஞ்சை அருகே தொடர்ந்து பெய்து வந்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
வல்லம்:

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள சின்னமுத்தாண்டிப்பட்டியை சேர்ந்தவர் சலீம். கூலி தொழிலாளி. இவரது மனைவி ‌ஷகிலாபானு. இவர்களது மகள் ரிஸ்வானாபர்வீன், மகன் அசாருதீன். இவர்கள் 4 பேரும் கூரை வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சலீம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து பெய்து வந்த மழையால் சலீம் வீட்டின் சுவர் ஈரத்தில் ஊறி போய் இருந்துள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் சிறுவன் அசாருதீன் இடிபாடுக்குள் சிக்கி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். அவனது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். மகனை காப்பாற்ற முடியவில்லையே.. என கூறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பூதலூர் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அசாருதீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News