செய்திகள்
கைது

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய்ப்பணம், நகை திருடிய மெக்கானிக் கைது

Published On 2021-11-24 02:41 GMT   |   Update On 2021-11-24 02:41 GMT
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய்ப்பணம், நகை திருடிய டி.வி. மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
வானூர்:

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியை சேர்ந்த டாக்டர் மணிமாறனுக்கும், வாழைக்குளம் பகுதியை சேர்ந்த டாக்டர் ஹேமலதாவுக்கும் கடந்த 15-ந் தேதி மயிலம் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இதற்கு அடுத்த நாள் மாலை வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பெறப்பட்ட மொய்ப்பணம் மற்றும் நகைகள் அடங்கிய ஒரு பையை செல்வக்குமார் என்பவர் வைத்திருந்தார். அவரை புகைப்படம் எடுக்க உறவினர்கள் அழைத்ததால் கையில் இருந்த பையை ஓரமாக வைத்துவிட்டு புகைப்படம் எடுக்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அந்த இடத்தில் பையை காணவில்லை. மண்டபத்தின் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து செல்வக்குமார் ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்தபோது, மர்ம ஆசாமி ஒருவர் மொய் பணம், நகைகள் இருந்த பையை நைசாக எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுபற்றி விசாரித்தபோது, திருமண மண்டபத்தில் திருடியது வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பதும் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் டி.வி. மெக்கானிக் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்து, வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரொக்கம், 7 மோதிரங்கள், 3 தங்க காசுகள் உள்பட 3¾ பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News