செய்திகள்
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை - கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்
திருச்சியில் இருந்து கொலை சம்பவம் நடந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி வரை அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் தீவிர ஆய்வு செய்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பூமிநாதன் (வயது 51), ஆடு திருடர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
திருச்சியில் இருந்து கொலை சம்பவம் நடந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி வரை அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் தீவிர ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், தஞ்சையை சேர்ந்த 10 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள், 19 வயது இளைஞர் மணிகண்டன் உள்பட 3 பேரை இன்று அதிகாலை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு இன்று இரவு மணிகண்டனை கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.