செய்திகள்
மா சுப்பிரமணியன்

அம்மா மினி கிளினிக்குக்கு ஒரு நர்சு கூட நியமிக்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

Published On 2021-11-22 01:53 GMT   |   Update On 2021-11-22 02:50 GMT
அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கிய அம்மா மினி கிளினிக் மூலம் எத்தனை பேர் பயன்பெற்றார்கள், என்னென்ன நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்ற கணக்கை எடப்பாடி பழனிசாமி காட்டினால் மகிழ்ச்சியாக இருக்கும்.
சென்னை :

சென்னை திருவொற்றியூர் எண்ணூரில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் நடந்த மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசியை 38 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி ஏறத்தாழ 72 லட்சம் பேருக்கு செலுத்த வேண்டியுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்போடு பட்டியல் தயாரிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தாதவர்கள் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை நடந்த 9 மெகா தடுப்பூசி முகாம்களில் 1 கோடியே 75 லட்சத்து 90 ஆயிரத்து 883 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் 97.5 சதவிகிதம் உயிர் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே 4-வது அலை, 5-வது அலை என்று வந்தாலும் உயிரிழப்பு என்பது குறைவாகத்தான் இருக்கும்.



அ.தி.மு.க ஆட்சியில் அம்மா மினி கிளினிக்குகள் 2 ஆயிரம் இடங்களில் தொடங்கப்படும் என்று முடிவெடுத்து 1,700 இடங்களில் நிறுவினார்கள். இவர்களுடைய நோக்கம் 2 ஆயிரம் இடங்களில் அம்மா மினி கிளினிக் என்று பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதுதான். ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்பதோ, மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதோ நோக்கம் கிடையாது. 1,700 அம்மா மினி கிளினிக்குகளில், 1,700 டாக்டர்களை தற்காலிகமாக நியமித்தார்கள். ஆனால் அதில் ஒரு மினி கிளினிக்கில் கூட ஒரு நர்சு கூட நியமிக்கவில்லை.

அம்மா மினி கிளினிக்குகளில் நியமித்த டாக்டர்களை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பழிவாங்கவில்லை. மாறாக அவர்களை கொரோனா பணிக்கு பயன்படுத்தினார்கள். அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கிய அம்மா மினி கிளினிக் மூலம் எத்தனை பேர் பயன்பெற்றார்கள், என்னென்ன நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்ற கணக்கை எடப்பாடி பழனிசாமி காட்டினால் மகிழ்ச்சியாக இருக்கும்.

நீரிழிவு, ரத்த அழுத்தம், நாள்பட்ட நோய்கள், டயாலிசிஸ், பிசியோதெரபி போன்ற நோய்களுக்கு வீடு தேடி சென்று சிகிச்சை மற்றும் மருத்துவம் பார்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 41 லட்சத்து 42 ஆயிரத்து 843 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பயன் அடைந்திருக்கிறார்கள். டெங்குவினால் 4 ஆயிரத்து 381 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 541 பேர் மட்டும்தான் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் 2017-ம் ஆண்டு 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.பி.சங்கர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News